27 Nov 2011

வழியும் நினைவுகளிலிருத்து

நன்றி: fuchsintal.com
 

இடுக்குகளில் கசியும்
வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு
மெல்லிய விழி
இதழ்களை விரித்து
புன்னகையால் ஒளி
வெள்ளம் பாய்ச்சுகிறாள்
கதிரவனை கண்ட காந்தியாய்
துள்ளி எழுகிறேன்....

பின்பனியில் உறைந்துபோன
எழுத்துக்கள் - அவளின்
ஆவணி கால அரங்கேற்றங்களில்
நிரம்பி வழியும் நினைவுகளிலிருத்து
கசியத் தொடங்குகிறது..

9 Feb 2011

ப்பா நிறங்கள்....



1.
டெடி பொம்மைக்கு
காய்ச்சலாம்
பிஞ்சு விரல்களில்
நெற்றி தொடுகிறாள்
காலிலும்  கையிலும்
ஊசி போடுகிறாள்
தடவி விடுகிறாள் 
நான் டெடியாகிக் கொண்டிருந்தேன்...

2.

ராசு  அண்ணன்
நேற்று வந்து போனான்
கமலா அக்கா
இன்று வந்திருக்கிறாள்
மாமனும் மச்சானும்
சித்தியும் சிக்கல்களும்
போன பின்
கேட்கிறான்
அப்பா னா என்னமா?


7 Jan 2011

முதல் பனி - 3

 (காரையார் அணை, பாபநாசம்)

ஒரு சந்திப்பையும், தொடர் நிகழ்வுகளையும் எப்படியெல்லாம் சொல்லலாம்......

விடிகாலை தேனீர் புகை
குழந்தையின் முதல் அழுகை
சன்னல் ஓர மழைத் துளி
ஒரு புத்தகம் கொடுக்கும் மூட முடியா பக்கம்
கனிந்த பழத்தின் ருசி

இவை எதுவுமில்லாமல்,
மெல்லிய வலியுடன் உறையும் உணர்வு.....

ஆரத்தழுவிய மனசு கங்காரு குட்டியை போல் அவரது நட்பின் வயிற்றில் இடம் பிடித்து அமர்ந்து கொண்டது. பிள்ளையின் தொண்டைக்குழி தேன் சுவை இன்ப ரேகைகள் என்னுள் பரவக் கண்டேன்.

நகர்ந்து கொண்டிருக்கும் நொடி முள்ளை என் நினைவுகளுக்குள் சொருகி விட்டேன். பிரசவம் பார்த்திருந்த உறவுக்குள் நட்பும் ஒட்டிக் கொண்டது. இரு உள்ளங்களும், மூன்று உடல்களும் அந்த பொழுதின் புதையலுக்குள் கரைந்துக் கொண்டிருந்தன....

குடும்பம்  வந்து போகிறது. தொழில் வந்து போகிறது. இடையிடையே எழுத்தும் வந்து போகிறது. இவை அனைத்தும் கவிதைகளாய் பூத்துக் குலுக்கும் ஒரு நாள்.

தோசையும், கெட்டி சட்னியும், பூரியும் கூடவே ஒட்டிக் கொண்டே பில்லும் "வணக்கம் அண்ணே"ங்களுக்கு நடுவில்.

நிகோடின் புகைகளுக்கு மூன்று நான்கு முறை உயிர் கொடுத்தாகி விட்டது.

உறவுக்கு வித்திட்டவள் புது ராஜ்ஜியம் நோக்கி நகர்கிறது ஆவல். பெற்றெடுத்து கொடுத்தவனும் தமையனா மாறியவனும் வழி மேல் விழி வைத்து வாசல் தேடி பயணிக்கின்றனர்.

தங்கையின் முகம் காண என் முன்னே சென்று விட்டது மனசு. அவளும் புன்னகைகளை விரித்து பாசம் கொட்டுகிறாள். அங்கு அண்ணனுக்கும், தங்கைக்குமாய் ஒரே கவிதை பதியப் படுகிறது........

அறிமுகப் படலம் நடக்கிறது. 

இரண்டு மாதங்களாய் சேர்த்து வைத்த பாசக் குமிழிகளை ஒவ்வொன்றாய் உடைத்து விதைத்துக் கொண்டு வருகிறேன்... நினைவுகள் நிகழ்வுகளாய் உருமாறிய தருணங்கள் அவை.....

வீட்டிற்கு செல்கிறோம். விவரம் பரிமாறப்படுகிறது. தாய் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார். அன்னையின் அன்ன வாசனை மூக்கு நுனியின் விலாசம் அறிந்து அமர்ந்து கொண்டது....

நிமிடங்கள் ரெக்கை கட்டி பறக்க அங்கும் இங்குமாய் மன ஓடத்தில் கோப்பைகளுக்குள் நிரம்பிக் கொண்டிருந்தோம்....

பசியின் அறைகூவலில் அடுக்கப் பட்ட ஆகார பைகளை திறந்த பின், தாய் அவள் திசை பார்த்து பாசத்தில் நன்றியில் வணங்கியது.

பசி மறைய மனம் மகிழ தொடர்ந்தது பயணம்... 




பாண தீர்த்த அருவியும், 
காரையார் அணையும் 
தண்ணீர் இல்லாமலும்  
நிறைந்தே இருந்தது 
பா ரா சத்தால்.....



21 Dec 2010

காண் யான்



என் இடப்பக்க வழி
தாழ் திறந்து
நினைவலைகளில் - உனக்கான
கனவுக் காட்சிகளை
உருவி
திரையிடுகிறேன்...

நகைக்கிறாய் - உன்
பிஞ்சு விரல்களால்
மெல்ல  வருடுகிறாய்
நேற்று பொழிந்த
பனிமழையில்
நனைகிறேன் நான்....

அள்ளி எடுத்து
காற்றில்
துள்ளிக் குதித்து
வீசி விளையாடுகிறாய்
காண் யான்
உயிர் சுவாசிக்கும்
நிஜங்களாய் - மிதந்து
தரை தொடுகிறேன்....

இதழ் நுனிகளில்

பதியும் - உன்
முத்தங்களின் ஈரம் -
என்னுள்
பெண்மையை தீண்டுதடி
முலையிலும் பாசம் சுரக்குதடி...


10 Dec 2010

முதல் பனி - 2




பனி என்றால்
அழகு, சந்தோசம், இனம் புரியா ஆனந்தம்.
உங்கள் முதல்
கவிதை
சம்பளம்
காதல்
பிள்ளையின் முதல் மொழி , அம்மா/அப்பா, முதல் கிறுக்கல்
முத்தம்....
இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி பல நிகழ்வுகளை நினைவில் நிறைத்து சுவாசிக்கலாம் இன்பத்தை.

பதின்ம  வயதில் கிறுக்கத் தொடங்கிய எனக்கு, எழுத்தைப் பற்றியும், மொழியை பற்றியும் பெரிய ஞானம் இருந்ததில்லை (இப்போ மட்டும் என்னவாம் ன்னு கேட்காதீங்க ப்ளீஸ்).

நாம் காதலிக்கும் பெண் நம்மை காதலிக்க, 
காதலின் வேகம் கூடுமே அப்படி,
எழுத்தின் வலிமையை உணர்ந்த தருணங்களில் எழுதும் வேகம் கூடியது. அதன் வழியே நட்புகளும் அமையப்பெற்றன உங்களைப்  போல.

நான் அனுபவித்த முதல் பனி எப்படி ஓர் அழகிய உணர்வோ, 
அதையே பிரதி எடுக்கும்
சில மனிதர்களின் சந்திப்பும், கை குலுக்கல்களும்.

இப்போ உங்களுக்கு புரிந்திருக்குமே, உங்கள் கணிப்பு சரிதான்...
இனி அப்படியான ஓர் அருமையான முதல் சந்திப்பு...

அன்று திருவிழா...
பட்டாசுகள் காதின் ஆழம் வரை சத்தத்தின் வலிமையைக் கொண்டு சென்ற களைப்பில் உறங்கப்போகும் அந்த இரவு வேளையில், 
நீண்டப் பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது மனசு...

ரோட்டோரக் கடையை திறக்க வைத்து, நாங்கள் சில பல ரொட்டிகளை உள்ளே தள்ளிய பின், உருமத் தொடங்கியது டாடாவின் குடும்பக் கார் ஒன்று.

ஏதோ பார்க்காததை பார்ப்பது போல் நெடுக, வழியை பார்த்து பார்த்து தேட வைத்து விட்டார் வருண பகவான். எங்களின்  நிழலாய் துரத்திக்கிட்டே இரண்டு மணி நேரம் வந்தார்...

மழையுடன் பாதைகளை அளந்துக் கொண்டிருந்த எங்களுக்கு, சொன்ன நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் வந்து சேர்கிறது அலைபேசி அலறல்.

"என்னப்பா எங்க இருக்கீங்க ?" - அந்தப் பக்க குரல்
"வந்துக் கொண்டே இருக்கோம் பா" - இது நான்

நேரம் - இரவு / விடியல் - 2.20AM

கொட்டும் மழையில் நனையும் பூப்போல, இந்த பாச மழையில்  நனைந்து நிறைகிறது என் உள்ளம்.. 

அங்க இங்க பாதையை புடிச்சு டீ குடிக்கும் மனசு அலையும் விடியல் நேரம் ஹோட்டலுக்குள் தஞ்சம் புகுந்த எங்களின் கண்கள் ஓய்விற்கு செல்ல, கைகளும் கால்களும் எனக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை என்று தனியே பாய்விரித்தது...

வெயில் எழுப்பியது என்னை..
அலைபேசியில் செய்தி " எழுந்தவுடன் கூப்பிடு"

எழுந்துவிட்டேன், படித்துவிட்டேன், அழைக்கிறேன்..

"வினோபா, என்னயா இப்போவே எழுந்திருச்சாச்சா?"
"ஆமாம்பா"
"எத்தனை மணிக்கு வரட்டும்?"
"ஒரு ஒன்பது மணிக்கு ரெடி ஆயிருவேன்"
"சரிப்பா  வரேன்"


குளித்துவிட்டு வெளியே வருகிறேன்.. சட்டைய தேடிக் கொண்டிருக்கிறேன், வாசல் மணி அழைக்க,
அவர் குரல் உள்ளிருக்கும் காற்றுடன் கலைகிறது..

"வினோ"
"இதோ வரேன்ப்பா"

ஒல்லியான உருவம், ஒரு T-Shirt, Jeans, அவ்வளவே..
இதழில் புன்னகை, மனதில் அமைதி, கரம் விரித்துக்கொண்டே வருகிறார்..

ஆரத்தழுவிக்  கொள்கிறோம்... மனசும், பாசமும், சந்தோசமும் தனித்தனியே தழுவிக் கொள்கிறது.. 

அவரின் அனைத்தும், என்னை ஆட்கொள்கிறது எளிமையாய், முழுமையாய் அவரது கவிதைகளைப் போல...

பனி இன்னும் கொட்டும்...